சனி, 1 மே, 2021

புதுக்குடியிருப்பில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு காவல் துறையால்.01-05-2021. இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்தும் வங்கி வைப்புக்களில் இருந்து சுமார் 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இவர்களால் சுமார் 150 பவுன் வரையான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில்
 தெரிய வந்துள்ளது.
குறித்த குற்றச்செயல்களில் பிரதான சூத்திரதாரி வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்தவராவார்.
இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் தொடர்புடையவர் எனவும் 
தெரிய வருகிறது.
சந்தேகநபரின் மனைவி, மருமகன், புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் இவருடைய அக்கா மற்றும் அவருடைய மகன் ஆகியோரே இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக 
தெரிய வந்துள்ளது.
இவர்களில் 3 ஆண்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும், அவர்கள் கொள்ளையிடும் நகைகளை குறித்த இரு பெண்களும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளதோடு, கிளிநொச்சி மக்கள் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடகு வைத்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற 8 கொள்ளை சம்பவங்களும் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோம்பாவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் சிசிரிவி காணொளி உதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட காவல் துறை  உயரதிகாரிகளின் ஆலோசனைக்கமைய புதுக்குடியிருப்பு காவல் துறை நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு காவல் துறை யினர்மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த ஐவரும் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களால் புதுக்குடியிருப்பில் 8 கொள்ளை சம்பவங்களும், கிளிநொச்சியில் 3 கொள்ளை சம்பவங்களும், யாழ்ப்பாணத்தில் 2 கொள்ளை சம்பவங்களும் மற்றும் முல்லைத்தீவில் 2 கொள்ளை சம்பவங்களும் நடாத்தப்பட்டுள்ளதாக காவல் துறையின் முதற்கட்ட விசாரணைகளில்
 தெரிய வந்துள்ளது.
குறித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு காவல் துறையினர்  சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக